பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 16, 2010

ஹலோ.. ஒரு நிமிஷம்!!

வெற்றி..தோல்வி!வாழ்க்கையில் மனிதனை வித்தியாசப்படுத்துவது இந்த வெற்றியும் தோல்வியும்தான். அது சச்சின் டெண்டுல்கராக இருக்கட்டும், சாதாரண சாமிநாதனாக இருக்கட்டும்; யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தும்.ஆனால், இந்த இரண்டுமே ஒருவனின் மனதிடத்தை பொருத்தே என்று விஞ்ஞானம் விவரிக்கிறது.

உங்கள் மனதிடம் என்பது இங்கே எதனை குறிக்கிறது? நான் வெற்றி பெற வேண்டும் என்பதையா? அல்லது நான் தோல்வி கண்டுவிடக்கூடாது என்பதையா?? "சார்... இரண்டுமே ஒன்றுதானே?" என்கிறீர்களா?? சற்றே உன்னிப்பாக கவனியுங்கள்! வித்தியாசம் காணலாம்...

"நான் வெற்றி பெற வேண்டும்" என்று நீங்கள் எண்ணும்போது உங்கள் கவனம் முழுவதும் வெற்றிக்கனி மீதே பதிந்திருக்கும். வெல்வதற்கான வழிமுறைகளை மட்டும் உங்கள் மனமும் புத்தியும் சிந்திக்கும், செயல்படுத்தும்! தோல்வியை பற்றி துளியும் நீங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை,காரணம் கவனம் வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

"நான் தோல்வி காணக்கூடாது" என்ற எண்ணம் தோல்வியடைய நேரிடும் காரணங்களை நோக்கிப் பயணிக்கிறது. கவனம் தோல்விக்கு குடை பிடிக்கும்போது வெற்றியை வெள்ளம் அடித்துச் செல்கிறது.இந்த எண்ணம் மனதில் ஒரு விதமான அழுத்தத்தை உண்டாக்குமே தவிர, அமைதியை உருக்கலைத்து விடுகிறது.

பள்ளி வாழ்க்கையில் ஒரு மாணவனுக்கு பரீட்சை என்கின்ற பாகற்காய் விதிவிலக்கல்ல. இங்கே ஒரு மாணவனின் சிந்தனை எப்படி இருக்குமென்றால் "நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும்" என்றோ அல்லது "இந்த தேர்வில் நான் தோற்கக்கூடாது" என்றோதான் இருக்கும்!

வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவன் திட்டமிட்டு காய்களை நகர்த்துவான். அட்டவணையிட்டு, கேள்விகளுக்கான விடை தேடி தன்னை தேர்வேன்னும் போர்க்களத்திற்கு தேற்றிக் கொள்கிறான்.

நேர்மாறாக தோல்வியடயக்கூடாது என்பவனை பயம்,தயக்கம் போன்ற மேகங்கள் சூழ்ந்து வெற்றி என்னும் அழகிய வானவில்லை ரசிக்க மறக்கின்றன."தெரியாத கேள்வி வருமோ??", "கேள்வி கடினமாக இருக்குமோ?" என்று குழப்பி எளிதான கேள்விக்கே பதட்டத்தில் தவறாக பதிலளித்து தோல்விக் கொடி நாட்டுகிறோம்.

சிந்தியுங்கள்.. தேர்விலும் சரி, வாழ்க்கையிலும் சரி, நீங்கள் "வெற்றி பெறவேண்டும் என்கிறீர்களா?" அல்லது "நான் தோல்வி கண்டுவிடக்கூடாது??" என்கிறீர்களா?? :):):)

No comments:

Post a Comment