பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 14, 2010

சொல்ல மறந்த கதைகள்...

என்னுடைய பயணத்தில் இது ஒரு சிறப்பான தருணம்.நீண்ட இடைவெளிக்குப்பின் சில பசுமையான நினைவுகளை எழுத சந்தர்ப்பம் அமைந்ததை சந்தோஷம் என்றே சொல்ல வேண்டும்.என் எழுத்தில் கலந்திருக்கும் ஜீவனுக்கும் இந்த ஜீவனாவிற்கும் ஆயுட்கால காதல் உண்டு.ஒரு உயிரின் தொடக்கம் எப்படி தாயின் கருவில் தொடங்குகிறதோ, அப்படித்தான் என் எழுத்துக்களும் இங்கே உயிர் பெற தொடங்கியது, ஜீவனா என்ற அன்னைமடியிலிருந்து.இந்த இருபத்தியாறு அகவையிலும் நான் பயின்ற அந்த இரண்டு வருடங்கள் என்றும் என் நெஞ்சில் நீங்காதவை.அன்பான நண்பர்கள்,அக்கறை மிகுந்த ஆசிரிய சிற்பிகள் என்று பல நல்ல உள்ளங்களுக்கு நான் இப்பொழுதும் அடிமை!


அன்று 04 .07 .2001 . பொன் கிடைக்கும், ஆனால் இந்த புதன் கிடைக்காது.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஜீவனாவில் என்னுடைய முதல் நாள்.வேடிக்கையாகவும் முடிந்த நாள்.புதிய நண்பர்கள் அறிமுகமானாலும், பள்ளியின் விதிமுறைகள் எனக்கும் என் நண்பனுக்கும் அறிமுகமாகவில்லை.கடைசி வகுப்பு முடிந்ததும்,மணியோசை கேட்டதுதான் தாமதம். எனக்கும் என் புதிய நண்பனுக்கும் போட்டி.என்ன போட்டி??பள்ளி பேருந்தை யார் முதலில் பிடிப்பது என்று!இரண்டாவது மாடியிலிருந்து புல்லிமான்களைப் போல துள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தோம்; வகுப்பறையிலிருந்தும், பள்ளியின் மூலையிலிருந்தும் யாரும் வெளிவரவில்லை என்பதை கவனிக்காமல்! 'Boys... Stop there' - ஓர் அவலக்குரல்! ஆசிரியையின் அதட்டலில் கார்ட்டூன் நிகழ்ச்சியில் வரும் டோம் அண்ட் ஜெர்ரி பொம்மையை போல ஓட்டம் கொண்ட நிலையிலேயே இருவரும் நின்றோம்!யாரும் வகுப்பறையை விட்டு வெளியே வரவில்லை என்பதை யூகித்துக் கொண்டிருந்தபோதே,எங்கள் செவியில் இசை என்னும் இன்பவெள்ளம் கரை புரள தொடங்கியது.பிறகு, ஆசிரியை அர்ச்சித்த பிறகே தெரிந்தது, தினமும் 'Meditation Period' என்று ஒன்று உள்ளது என்று!டாமிடம் மாட்டிய ஜெர்ரி போல நாங்கள் விழி பிதுங்கி நின்ற காட்சி, இன்றும் எனக்கு நகைப்பை மூட்டுகிறது.அன்றே பல அன்பர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள்!

வேடிக்கையாக ஆரம்பித்த அந்த நாளுடன், ஆசிரியை ஒருவரை வேதனைப்படுத்திய நாளையும் இங்கே விவரிக்கவேண்டும். அதற்க்காக இப்பொழுதும் என் மனம் வருந்தும்.!!

அன்று 22.01.2002, செவ்வாய்! உணவு இடைவேளைக்கு முன் அன்று பள்ளியில் பிரார்த்தனை!நான் ஆவலோடு இந்த நாளுக்காக காத்திருந்தேன் என்பதைவிட என் நண்பர்கள் மிகவும் ஏக்கத்தோடு காத்திருந்தனர்.சரி..கதைக்கு வருவோம்.என் இயற்பியல் ஆசிரியையே எனக்கு வகுப்பாசிரியை.அவர் கூடத்தை கடந்து செல்கையில் என்னை அழைத்தார்.நண்பர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்றாயிற்று.நான் அப்பொழுது நடைபெற்ற தேர்வுகளில் சொல்லும்படியாக சாதிக்கவில்லை. என் கவனம் எழுத்தில் படியேறிய காலம். என்னை அக்கறையுடன் கண்டித்த முதல் ஆசிரியை.நான் பதில் ஏதும் பேசவில்லை.ஆனால், என் செயலை நினைத்து மிகவும் வருந்தினேன்.என் எழுத்தை சற்றும் குறை கூறாமல் நான் படிப்பில் தேய்பிறை ஆகிவிடக்கூடாது என்று என் நிலையை எனக்கு புரியவைத்தார்.கீழே மாணவர்கள் கைதட்டல் கேட்டு அவர் என்னை பிரார்த்தனைக்கு செல்லுமாறு கூறினார்.விடைபெற்றேன்.

மறுநாள்,அதே நேரம்,அதே சந்தர்ப்பத்தில் என் ஆசிரியை அழைத்தார்.வணங்கினேன்.

'நேற்று நீ பரிசு வாங்க மேடைக்கு செல்ல வேண்டும் என்று உனக்கு தெரியுமல்லவா?' என்றார்.


ஆமாம் என்று தலையசைத்தேன்.

'இதுதானே உனது முதல் பரிசு?' என்று கேட்டார்.

மெளனமாக மீண்டும் தலையசைத்தேன்.

முதல்நாள் என் நண்பர்கூட்டம் என்னை மேடையேற்ற கனாக்கண்டு நான் வராமல் போகவே மிஞ்சியது ஏமாற்றம்!முதன்முறையாக கவிதைப்போட்டி ஒன்றில் பங்கெடுத்து மூன்றாவது பரிசு வென்றிருந்தேன்.பிரார்த்தனை முடிந்ததும் மேடையில் நான் பரிசினை பெற்றிருக்கவேண்டும்.ஆனால்,நானோ என் ஆசிரியை மீது கொண்ட மரியாதைக்குமுன்,பரிசொன்றும் பெரிதாக புலப்படவில்லை.என் கல்வியில் மட்டுமே அக்கறை கொண்ட என் ஆசிரியைக்கு விஷயம் யார் மூலமாகவோ தெரியவந்த பிறகு,மீண்டும் இந்த அழைப்பு.

மனவருத்தம் அவர் முகக்கன்னடியில் பிரதிபலித்தது.இருவருக்கும் தர்மசங்கடமான நிலை.சிவந்த கண்கள், வருந்திய மனம் என்று அவரை என் விழிகள் படித்துக்கொண்டிருந்த அதே தருணம்,புன்னகை முகம் மலர்த்து,என் கரம் குலுக்கி,"மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!" என்றார்.

'நன்றி!' சொன்னபோது,முதல்நாள் கேட்ட கைதட்டல் மீண்டும் ஒலிப்பதுபோல் மனம் உணர்ந்தது.


இன்றும் என் ஆசிரியர்களை,என் போன்ற சிர்ப்பிகளை செதுக்கும் அந்த சிந்தனை சிற்பிகளை நினைத்து பெருமை கொள்கிறேன்.என்னை பலருக்கு ஞாபகம் இல்லாமலும் போயிருக்கலாம்.தவறில்லை!ஏனெனில்,காலம் என்னை பள்ளியிலிருந்து எங்கோ ஒரு மூலையில் தூக்கி எறிந்துவிட்டது,என் நினைவுகளை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு!என்னை போன்ற ஒவ்வொரு ஜீவன மாணவ சிற்பத்திலும் இப்படி சொல்ல மறந்த கதைகள் ஒன்றல்ல..இரண்டல்ல..ஏராளம்! கதைகள் தொடரும்... :):):)

-கார்த்திக்
ஜீவனா
(2001-2003)

No comments:

Post a Comment