பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Sep 4, 2018

நன்றி தினம்!


பிஞ்சில் என் விரல் வளைத்து
நேர்த்தியாய் நான் வார்த்தை எழுதியதை...
தாய் தந்தைக்கு முன்...
நீர் கண்டு மகிழ்ந்தீர்!

தாய்மொழி ஒன்றே
நான் தெரிந்திருந்தாலும்...
என் வாய் பல மொழி
தெளிந்து பேசும் கலை கற்றது..
உம்மிடம்!

உந்தன் கருவறையில் 
நாங்கள் இல்லையென்றாலும்
நிற மத பேதம் பாராமல் 
ஈன்ற பிள்ளைகள் போல் 
வழிநடத்துவது...
உங்கள் உள்ளமே! 

தெரிந்தும் தெரியாமல்
இழைக்கும் பிழைக்கு
கண்டித்து மன்னிக்கும் மனிதரில்...
ஓர் மாணிக்கம் நீர்! 

சமூகத்தின் அறியாமை இருளின் 
நம்பிக்கை வெளிச்சமாய்...
அறிவின் சுடராய்...
எங்கள் ஆர்வத்தை ஒளியேற்றுபவர் நீர்! 

வெறுங்கையை வேடிக்கை பார்த்த போதெல்லாம்...
நம்பி(க்)கை தந்து
எதையும் கடக்க சொன்ன
தாரக மந்திரம் நீர்! 

கற்பித்தலில் நீங்கள் கொண்டாடலாம்..
தினம் தினம்
கற்றதனால் ஆன பலன் என்ன என்று 
நாங்கள் சொல்லும்
ஒரு நன்றி தினம்..
இந்த ஆசிரியர் தினம்!